இமாம் அலீயின் இமாமத்தை நிரூபிக்கின்ற ‘விலாயத் ஹதீஸ்’
✦•······················•✦•······················•✦
‘யாருக்கு நான் மௌலாவாக (தலைவராக) இருக்கிறேனோ,, அவருக்கு அலி மௌலாவாக (தலைவராக) இருப்பார்’
அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே…!
இந்த உலகில் நம்முடைய எஜமானர் முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹுத் தஆலாவின் தூதராக இருக்கிறார். அவர் கூறிய ஹதீஸ்களில் மிக முக்கியமான ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்:
‘مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ، اللَّهُمَّ وَالِ مَنْ وَالَاهُ وَعَادِ مَنْ عَادَاهُ’
என்ற இந்த ஹதீஸ் மிகப் பெரிய அளவில் புகழ்பெற்றதாகும். பல நூற்றாண்டுகளாக சுன்னி மற்றும் ஷீஆ அறிஞர்கள் இதைப் பதிவு செய்துவந்துள்ளனர்.
அபூல்காசிம் சுலைமான் இப்னு அஹ்மத் அத்தபரானி (ரஹ்) தனது ‘முஃஜம்’ (முஃஜமுத் தபரானி) என்ற நூலில் இந்த ஹதீஸை அறிவித்து, இவ்வாறு கூறுகிறார்:
எங்களுக்கு அஹ்மத் இப்னு இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு கைசான் அத்தகஃபி அல்மதனி அல்இஸ்பஹானி (ரஹ்) அறிவித்தார் (ஹிஜ்ரி 299-ம் ஆண்டு). அவர் இஸ்மாயில் இப்னு அம்ரு அல்ஜஅலி (ரஹ்) வழியாக, அவர் முஸ்அர் (ரஹ்) வழியாக, அவர் தல்ஹா இப்னு முஸ்ரிஃப் (ரஹ்) வழியாக, அவர் உமைர் இப்னு சஃத் (ரஹ்) வழியாக அறிவித்தார்.
உமைர் இப்னு சஃத் கூறுகிறார்: நான் அலி (ரழி) அவர்களை மேடையில் நின்று, நபி ﷺ அவர்களின் தோழர்களை நோக்கி சத்தியம் செய்து கேட்டுப் பேசுவதைப் பார்த்தேன். அவர் கூறினார்:
‘எவர் கதீர் கும்மில் நபி ﷺ அவர்கள் கூறியதைச் செவியுற்றிருந்தாரோ, அவர் அது என்னவென்று சாட்சியம் சொல்லட்டும்!’
அப்போது பன்னிரண்டு பேர் எழுந்து நின்றனர். அவர்களில் அபூஹுரைரா மற்றும் அனஸ் இப்னு மாலிக் (ரழி) ஆகியோரும் இருந்தனர். அவர்கள் சாட்சியம் சொன்னார்கள்:
‘நாங்கள் நபி ﷺ அவர்கள், கதீர் கும்மில் இவ்வாறு கூறியதைச் செவியுற்றோம்:
‘مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ، اللَّهُمَّ وَالِ مَنْ وَالَاهُ وَعَادِ مَنْ عَادَاهُ’
அதாவது, ‘யாருக்கு நான் மௌலாவாக (தலைவராக) இருக்கிறேனோ,, அவருக்கு அலியும் மௌலாவாக (தலைவராக) இருப்பார். யா அல்லாஹ்! யார் அவரை விரும்புகிறாரோ நீயும் அவரை விரும்பு, யார் அவரை வெறுகிறாரோ நீயும் அவரை வெறு.”
இந்த ஹதீஸை அபூநுஐம், இப்னு மகாஸிலி போன்ற பல சுன்னி அறிஞர்களும் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஹதீஸ் மிகவும் புகழ்பெற்றதாகும். இதை ஒரே ஒரு அறிவிப்பாளர் மட்டும் அறிவிக்கவில்லை. சுன்னி மற்றும் ஷீஆ இரு பிரிவினரும் பல்வேறு வழிகளில் இதை அறிவித்துள்ளனர். இது ‘முதவாதிர்’ (பல நபர்கள் ஒருங்கிணைந்து அறிவித்த ஹதீஸ்) அளவுக்கு உயர்ந்த நிலையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) தனது ‘முஸ்னத்’ நூலில், இப்னு அப்பாஸ் (ரழி) வழியாக, புரைதா அல்அஸ்லமி (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்:
‘நான் அலி (ரழி) அவர்களுடன் யேமன் போருக்கு சென்றேன். அவரது சில செயல்களில் எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது. நபி ﷺ அவர்களிடம் வந்து அலி (ரழி) அவர்களைப் பற்றி குறையாகக் கூறினேன். நபி ﷺ அவர்களின் முகம் மாறியது. அவர் கேட்டார்கள்:
‘புரைதா! நான் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய ஆன்மைவிடவும் மிக அதிகமாக உரிமை உடையவன் அல்லவா?’
நான் ‘ஆம் யா ரஸூலல்லாஹ்!’ என்றேன்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
‘مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ’
அதாவது, ‘யாருக்கு நான் மௌலாவாக (தலைவராக) இருக்கிறேனோ,, அவருக்கு அலியும் மௌலாவாக (தலைவராக) இருப்பார்.”
இதேபோல், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) மற்றொரு அறிவிப்பில், புரைதா (ரழி) வழியாக:
நபி ﷺ அவர்கள் ஒரு சிறு படையை அலி (ரழி) அவர்களின் தலைமையில் அனுப்பினார்கள். படை திரும்பியபோது சிலர் அலி (ரழி) அவர்களைப் பற்றி முறையிட்டனர். நபி ﷺ அவர்களின் முகம் சிவந்தது. அவர் மூன்று முறை இவ்வாறு கேட்டார்கள்:
‘அலியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அலியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அலியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’
பிறகு கூறினார்கள்:
‘عَلِيٌّ مِنِّي وَأَنَا مِنْهُ، وَهُوَ وَلِيُّ كُلِّ مُؤْمِنٍ بَعْدِي’
அதாவது, ‘அலி என்னில் நின்றுமானவர், நான் அவரில் நின்றுமானவன். அவர் எனக்குப் பிறகு ஒவ்வொரு முஃமினுக்கும் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோருக்கும்) ‘வலி’யாக (தலைவராக) இருப்பார்.’
இமாம் திர்மிதீ (ரஹ்) தனது ‘சஹீஹ்’ (சுனனுத் திர்மிதி) நூலில், இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) வழியாக அறிவிக்கிறார்:
நபி ﷺ அவர்கள் ஒரு படையை அலி (ரழி) அவர்களின் தலைமையில் அனுப்பினார்கள். அந்தப் படையில் ஒரு பெண் கைதியை அலி (ரழி) அவர்கள் தன் கனீமத்துப் பங்காக எடுத்துக் கொண்டதாகச் சிலர் முறையிட்டனர். நபி ﷺ அவர்கள் கோபத்துடன் கூறினார்கள்:
‘مَا تُرِيدُونَ مِنْ عَلِيٍّ؟ مَا تُرِيدُونَ مِنْ عَلِيٍّ؟ مَا تُرِيدُونَ مِنْ عَلِيٍّ؟ إِنَّ عَلِيًّا مِنِّي وَأَنَا مِنْهُ، وَهُوَ وَلِيُّ كُلِّ مُؤْمِنٍ بَعْدِي’
அதாவது, ‘அலியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அலியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அலியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அலி என்னில் நின்றுமானவர், நான் அவரில் நின்றுமானவர். அவர் எனக்குப் பிறகு ஒவ்வொரு முஃமினுக்கும் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோருக்கும்) ‘வலி’யாக (தலைவராக) இருப்பார்.’
・✦ʚ♡ɞ✦・முக்கிய விளக்கக் குறிப்புகள்・✦ʚ♡ɞ✦・
1. மேலே கூறப்பட்ட ஹதீஸ்களில் வந்துள்ள ‘மௌலா’ என்ற சொல் இங்கு ‘தலைவன், பாதுகாவலன், உரிமையாளன்’ என்ற பொருளில் வருகிறது. இது இமாம் அலி (அலை) அவர்களின் இமாமத்தையும், கிலாஃபத்தையும் (தலைமைத்துவத்தை) தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
2. இந்த ஹதீஸ் ஒரு சிலரால் மட்டும் அறிவிக்கப்படவில்லை. பல எண்ணிக்கையிலான நபித்தோழர்கள் இதை அறிவித்துள்ளனர்.
சில அறிஞர்கள் இந்த ஹதீஸை ‘முதவாதிர்’ என்று வகைப்படுத்தியுள்ளனர். அதாவது, பல அறிவிப்புத் தொடர்களில் வந்துள்ளமை, எந்த சந்தேகமும் இல்லாத அளவுக்கு உறுதியாக உள்ளது.
3. இமாம் அலி (அலை) அவர்களை விமர்சித்தவர்களுக்கு, நபி ﷺ அவர்கள் கடுமையாக எச்சரித்ததைப் பல ஹதீஸ்களில் காணலாம். இது இமாம் அலி (அலை) அவர்களின் உயர்ந்த நிலையைத் தெளிவாகக் காண்பிக்கிறது.
4. சிலர் இந்த ஹதீஸில் வந்துள்ள ‘மௌலா’ அல்லது ‘வலி’ என்ற சொல்லுக்கு ‘விசேட அன்பைக் கொண்டவர்’ என்று மட்டும் பொருள்படுத்த முயற்சிக்கின்றனர். அதாவது, நாம் இமாம் அலீ (அலை) அவர்களை அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை மட்டும் இந்த ஹதீஸ் வலியுறுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அது சரியல்ல. ஏனெனில் ‘மௌலா’ மற்றும் ‘வலி’ என்ற சொல் பொதுவான தலைமைத்துவத்தையே இங்கு குறிக்கிறது.
ஏனெனில், நேசித்தல் என்ற விடயம் நபிகளார் உயிரோடு இருக்கும்போதும், இல்லாதபோதும் வேண்டப்படுவதாகும். ஆனால், ‘தனக்குப் பிறகு’ என்று நபி ﷺ அவர்கள் குறிப்பிட்டமை, ஒருவரை தனக்குப் பிறகு நேசிக்குமாறு நபியவர்கள் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. எனவே, இது தலைமைத்துவம் மற்றும் பொறுப்புவகித்தல் பற்றியதாகும். நபிகளாருடைய தலைமைத்துவமும், பொறுப்பும் அவருக்குப் பிறகு, இமாம் அலி (அலை) அவர்களுக்கு கைமாறுவதை இந்த ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, இந்த ஹதீஸ் தெளிவாக இமாம் அலி (அலை) அவர்களின் இமாமத்தையும், நபி ﷺ அவர்களுக்குப் பிறகான தலைமைத்துவத்தையும் நிரூபிக்கிறது. இதை மறுப்பவர் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார். அல்லாஹு தஆலா, நபி ﷺ அவர்கள் வேண்டிக்கொண்டதைப் போன்று நம்மையும் இமாம் அலீ (அலை) அவர்களின் வழியில் நடக்கச் செய்வானாக!


Leave a Reply